இலங்கை. மலையகம். கந்தலோயா.
1 தோட்டத் தொழிலாளியின் 1 நாள் சம்பளம் 3 EUR மட்டுமே. 1 மாதத்தில 14 நாட்கள் மட்டுமே வேலை. 1 மாதத்தில் மிகுதி 16-17 நாட்களுக்கு வருமானம் இல்லை. இவர்களின் வருமானம் அடிப்படை வாழ்வாதாரத்துக்கே போதாமையால் பல குடும்பங்களில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய பிள்ளைகள் உழைப்பதற்குச் செல்லுகின்றனர் அல்லது வீட்டில் இருக்கின்றனர். வறுமையில் இருக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வியைச் சாத்தியமாக்குவதற்கும் இதன் மூலம் வருமானம் போதாத பெற்றோருக்கு ஏற்படும் மேலதிக பொருளாதாரச் சுமையில் சிறிதளவைக்குறைப்பதற்கும், உங்கள் நிதி உதவுகிறது.
250 பிள்ளைகள் படிக்கின்ற கந்தலோயாத் தோட்டத்திலுள்ள பாடசாலைக்கு மொத்தமாக 22 ஆசிரியர்கள் தேவை. ஆனால் இருப்பது 8 ஆசிரியர்கள் மட்டுமே. தமிழ்- சிங்கள எல்லைப் பகுதியில்,
நகரில் இருந்து நீண்ட தொலைவில், போக்குவரத்து வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் இருக்கின்ற இத் தோட்டப் பாடசாலைக்கு சிரமங்கள் கருதி ஆசிரியர்கள் வருவதில்லை. வருபவர்களும் நிலைத்திருப்பதில்லை. இந்த நிலைமையில் 12ஆம் வகுப்பு வரை வகுப்புக்களைக் கொண்ட இப் பாடசாலையானது எதிர்கொள்ளும் சிரமத்தினை ஓரளவாவது தவிர்க்கும் பொருட்டு உங்களால்
வழங்கப்படுகின்ற நிதி உதவி மூலமாகக் குறித்த பாடங்கள் தெரிந்த, ஆனால் வேலைவாய்ப்பற்று இருக்கின்ற இளைஞர்கள் ஆசிரியர்களாகக் கந்தலோயாப் பாடசாலைக்கு அழைத்து வரப்படுகின்றார்கள்.
இலங்கை. கிழக்கு மாகாணம்.
யுத்தத்தினால்/ வேறு காரணங்களால் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய இடங்களில் வாழுகின்ற பிள்ளைகள் தாம் வாழும் சூழலின் பாதிப்பினால் அடிப்படை அறிவில் தம் வயதையொத்த பிள்ளைகளுடன் சேர்ந்து நிற்க முடியாதவர்களாயுள்ளார்கள். இவர்களுக்கு எழுதவும், வாசிக்கவுமான பரீட்சயத்தை ஏற்படுத்துதல் என்பது மெல்லக் கற்றல் செயற்பாட்டின் அடிப்படையாகும். இச் செயற்பாட்டை முன்னெடுப்பவர்களாக சமூக, பொருளாதார நிலைமையினால் தமது உயர்தரக் கற்றலைத் தாண்டித் தொடர முடியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும்
இளைஞர்களை உங்கள் நிதி மூலம் வெளியுலகுக்கு அழைத்து வந்துள்ளோம்.
இந்தச் செயற்பாடுகள் தொடருவதும் வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதும் உங்களைப் போல் நண்பர்கள் தரும் நிதி மூலமே சாத்தியம். தொடர்ந்தும் உதவுங்கள். உங்கள் நண்பர்களையும் இணைத்துவிடுங்கள்.
உங்கள்
உதவி.நண்பர்கள்
உங்கள் பங்களிப்புக்கு பிள்ளைகள் சார்பாக எமது நன்றிகள்.
நீங்கள் தரும் நிதியின் பயன்பாடு, மற்றும் அனைத்து நிதி விபரங்களையும் எந்நேரத்திலும் (24/7) www.uthawi.net/donor என்ற இணைய முகவரியில் பார்வையிடுவதற்கான பயனாளர் விபரங்கள் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் கிடைக்கவில்லையாயின் மின்னஞ்சலில் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்களது நிதியால் பயன்பெறும் செயற்பாடுகள்:
* சின்னஞ்சிறிய பூக்கள் நூல் வெளியீடு (பிள்ளைகள் எழுதிய ஆக்கங்களின் தொகுப்பு)
* சந்தோசப்பொழுதுகள் ( பிள்ளைகள் / பெற்றோர்கள் ஒன்றாகப் பங்குபற்றும் நிகழ்வு)
* பாடசாலை உபகரணங்கள் வாங்குவதற்கான நிதி
* பாடசாலை ஆசிரியர்களுக்கான நிதி
* மாணவர் விடுதிக்கான நிர்வாக நிதி
* உலக சினிமா செயற்பாட்டாளர்களுக்கான நிதி
* கதை சொல்லல் செயற்பாட்டாளர்களுக்கான நிதி
* மெல்லக் கற்றல் ஆசிரியருக்கான நிதி
* க.பொ.த.சாதாரண வகுப்பு மாணவர்களுக்கான நிதி
உங்களைப் போன்ற தனிப்பட்ட நண்பர்களின் பெருந்தன்மையான ஆதரவினாலேயே எமது செயற்பாடுகள் தொடர்கின்றன.
* ஜேர்மன் நண்பர்களால் பதிவுசெய்யப்பட்ட அமைப்பான Kriegswaisenhilfe Sri-Lanka e.V இன் வங்கிக்கணக்கிற்கு நண்பர்களின் நிதி வந்து சேருகிறது.
* வங்கிக்கூலியை இயன்றவரை குறைப்பதற்காக வருடத்தில் ஒரு முறை மட்டும் இலங்கையிலிருக்கும் உதவி. நண்பரின் வங்கிக் கணக்கிற்கு நிதி அனுப்பப்படுகிறது.
* நிதி அனுப்புவதற்காகவும், கணக்கு வைத்திருப்பதற்காகவும் வங்கியால் அறவிட்டப்படும் கூலி மட்டுமே எமக்குக் கிடைக்கும் நிதியிலிருந்து உதவி. செயற்பாடுகளுக்கல்லாமல் எடுக்கப்படும் ஒரேயொரு செலவாகும்.
* இலங்கை வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும் நிதி நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
* செயற்பாடுகளுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படும் நிதி உரிய தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை அந்தந்த இடங்களுக்கு போய் நேரில் பார்த்து உறுதி செய்து கொள்கிறோம்.
* செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துபவர்களினால் கணக்கு அறிக்கைகள் எமக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
* இலங்கையிலிருந்து வரும் கணக்கு அறிக்கைகள், இலங்கை வங்கிக் கணக்கின் பற்றுச்சீட்டு, ஜேர்மன் வங்கிக் கணக்கின் பற்றுச்சீட்டுகள் என்பன Kriegswaisenhilfe Sri-Lanka e.V அமைப்பினால் ஜேர்மன் நிதித்திணைக்களத்திடம் கண்காணிப்பிற்காக ஒப்படைக்கப்படுகிறது.
இவையனைத்துக்கும் மேலாக, இலங்கையில் உதவி.செயற்பாடுகள் நடைபெறும் இடங்களுக்கு வருவீர்களாயின், எங்களுக்குக் கிடைக்கின்ற நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுகிறதா என நேரில் பார்த்துக்/கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடிய வழி என்றும் திறந்தேயுள்ளது
எங்களுடன் இணைந்து பிள்ளைகளுக்கு ஆதரவளிப்பதற்காக உங்களுக்கு எமது நன்றிகள்.
அன்புடன்,
உதவி.நண்பர்கள்