எப்படிச் செய்கிறோம்
இடங்களின் தெரிவு
சிறுவர்களுக்கு/மாணவர்களுக்கு உதவி தேவைப்படும் இடங்களைத் தெரிந்து கொண்ட பின்னர் அவ்விடங்களுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள சிறுவர் இல்லங்கள், கிராமிய அமைப்புகள், பள்ளிக்கூடங்களுடன் தொடர்பு கொண்டோம். இதன் மூலம் எந்த வகையிலான உதவி தேவைப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம். உதவி வழங்கலின் தொடர்பாளராக அந்தந்தப் பிரதேசங்களில் செயற்பட உடன்பட்டவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
நிதி பகிர்வு
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கதைசொல்லல், மெல்லக்கற்றலை செயற்படுத்துபவர்களுக்கு எமக்குக் கிடைக்கின்ற நிதி பகிர்ந்து கொடுக்கப்படுகின்றது. சமூக, பொருளாதார நிலைமையினால் தமது உயர்தரக் கற்றலைத் தாண்டித் தொடரமுடியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் இவர்களை மெல்லக் கற்றல் மூலமாக வெளியுலகுக்கு அழைத்து வந்துள்ளோம். அவர்களின் பொருளாதார நிலையினைக் கருத்திற்கொண்டு ஊக்குவிப்பாகவே இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
மலையகத்தில் பாடசாலை அதிபர் மூலமாக ஆசிரியர்களுக்கும், நிதி தேவைப்படும் மாணவர்களுக்கும் நிதி பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. நிதி உரியமுறையில பயன்படுத்தப்படுவதை கண்காணிப்பவராக பாடசாலை அதிபரே செயற்படுகிறார். ஆயினும் பாடசாலை அதிபருடன் கந்தலோயாத் தோட்டத்தினைச் சேர்ந்த அதாவது மாணவர்களின் பெற்றோர்களும் இணைந்ததாக ஒரு குழு தெரிவு செய்யப்பட்டு அங்கு இடம்பெறும் செயற்பாடுகள், நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் அக் குழுவினராலும் கண்காணிக்கப்படுகின்றது.
நிதி சேகரிப்பு
உதவியானது சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் இயங்குவதனால் அந்த அடிப்படையைப் பாதுகாக்கும் பொருட்டு நண்பர்கள் தருகின்ற நிதி மட்டுமே எமக்கான நிதி வளம். நிதி தருபவர்களாயும், நிதி சேகரிப்பாளர்களாயும் நண்பர்களே செயற்படுகின்றனர்.
நிதி பரிமாற்றம்
ஜேர்மனியில் Kriegswaisenhilfe Sri-Lanka eV என்ற பதிவு செய்யபட்ட அமைப்பின் வங்கிக்கணக்கு மூலமும், சுவிஸ், இங்கிலாந்து, கனடாவில் அந்தந்த நாடுகளிலுள்ள உதவி.நண்பர்களின் வங்கிக்கணக்கு மூலமும் நிதி சேர்க்கப்பட்டு, இலங்கையிலுள்ள உதவி.நண்பரின் இலங்கை வங்கிக் கணக்கிற்கு (வங்கிக்கூலியைச் சேமிப்பதற்காக) வருடம் 1 முறை அனுப்பி வைக்கப்படுகிறது. இலங்கை உதவி.நண்பர் வங்கிக்கணக்கில் இருந்து ஒவ்வொரு மாதமும் செயற்பாட்டாளர்களின் வங்கிக்கணக்கிற்கு அவர்களுக்குரிய நிதி பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. வங்கிகள் மூலமாக மட்டுமே நிதிப்பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன.
நிர்வாகம்
எங்களுக்கென்று தனியாக அலுவலகமோ, வேறு நிர்வாக அலகுகளோ இல்லை. இணையம், தொலைபேசி மூலமும், சாத்தியப்படும்போது நேரடியாகவும் எங்களுக்கிடையேயான தொடர்புகள் இடம்பெறுகின்றன. சமூக, பொருளாதார நிலைமைகளினால் கல்வி தடைப்படுபவதைத் தடுப்பது எங்களதும் பொறுப்பாக இருப்பதால் சம்பளமற்ற கூட்டுழைப்பு மூலம் செயற்படுகின்றோம். அதனால் எங்களுக்கு கிடைக்கின்ற நிதியில் வங்கிக்கூலி தவிர்ந்து முழு நிதியும் இலங்கையிலுள்ள உதவி தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே போய்ச் சேருகிறது.
கண்காணிப்பு
2002ம் ஆண்டு டிசம்பர் மாசத்தில் இருந்து இன்றுவரையான அனைத்து நிதிப்பரிமாற்றங்களையும் நிதிதருவோர் எந்நேரத்திலும் எமது இணையத்தளத்தில் தங்களுக்கான கடவுச்சொல் மூலம் பார்வையிடலாம். இங்கே தகவல்கள் யாவும் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்புக்கமைய பார்வைக்கு வைக்கப்படுள்ளன.
செயற்பாடுகள் இடம்பெறும் இடங்களுக்கு நீங்கள் வருவீர்களாயின் அங்கும் செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிடலாம்.